சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Audio: https://www.youtube.com/watch?v=lK4XZljS70A
2.060
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்பாசூர் - காந்தாரம் அருள்தரு பசுபதிநாயகியம்மை உடனுறை அருள்மிகு பாசூர்நாதர் திருவடிகள் போற்றி
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
[ 1]
பேரும் பொழுதும் பெயரும் பொழுதும், பெம்மான் என்று
ஆரும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
ஊரும் அரவம் உடையார், வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.
[ 2]
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.
[ 3]
பொங்கு ஆடு அரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,
கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்,
தம் காதலியும் தாமும் வாழும் ஊர்போலும்
பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.
[ 4]
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்
சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,
வாடல் தலையில் பலி தேர் கையார், ஊர்போலும்
பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
[ 5]
Go to top
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சு ஆக,
தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத்
தொழுவார்கள்
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார்; ஊர்போலும்
பால் வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.
[ 6]
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.
[ 7]
தேசு குன்றாத் தெண் நீர் இலங்கைக் கோமானைக்
கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்
பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
[ 8]
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்து அணையானும்,
புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;
செகு வாய் உகு பல் தலை சேர் கையார் ஊர்போலும்
பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
[ 9]
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயம் இல்லார்;
காவல் வேவக் கணை ஒன்று எய்தார் ஊர்போலும்
பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
[ 10]
Go to top
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்
தேனும் வண்டும் இன் இசை பாடும் திருப் பாசூர்க்
கானம் உறைவார் கழல் சேர் பாடல் இவை வல்லார்,
ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.
[ 11]
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பாசூர்
2.060
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
சிந்தை இடையார், தலையின் மிசையார்,
Tune - காந்தாரம்
(திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
5.025
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி மூ எயில் எய்த
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
6.083
திருநாவுக்கரசர்
தேவாரம்
விண் ஆகி, நிலன் ஆகி,
Tune - திருத்தாண்டகம்
(திருப்பாசூர் பாசூர்நாதர் பசுபதிநாயகியம்மை)
This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400